3BHK: A property with three Bedrooms, a Hall, and a Kitchen | 2006-இல் சென்னை நகரின் ஒரு நடுத்தர மக்கள்தொகை சூழலில், வசுதேவன் மற்றும் அவரது மனைவி சாந்தி தங்கள் இரண்டு பிள்ளைகள் பிரபு மற்றும் ஆர்த்தி உடன் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். வசுதேவனின் கனவு தெளிவானது.
“சென்னையில் சொந்தமாக மூன்று படுக்கையறை கொண்ட ஒரு வீடு வாங்க வேண்டும்.”
ஒரு நடுத்தர குடும்பத்தின் கனவு. ஆனால் அந்த கனவு, அவர்களின் மாத வருமானத்தையும், வாழ்க்கையின் சிக்கல்களையும் கடந்து செல்ல வேண்டிய ஒரு போராட்டமாக மாறுகிறது.
வாழ்க்கையின் அழுத்தங்கள் – பணம் மட்டும் அல்ல, மன அழுத்தமும்
இந்தக் குடும்பம் மாதம் ₹25,000 சேமிக்க முயற்சிக்கிறது. ஆனால் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், அவர்கள் எதிர்கொள்கிற சவால்கள்; வாடகை உயர்வு, மருத்துவ செலவுகள், பள்ளி கட்டணங்கள், இவை அனைத்தும் ஒரு மெல்லிய அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இது ஒரு பொருளாதார சிக்கல் மட்டுமல்ல; இது ஒரு மனநிலை சிக்கலும்.
சாந்தியின் உழைப்பு – ஒரு பெண்ணின் அடையாளம்
சாந்தி, ஒரு வீட்டு சமையல் கலைஞராக, இட்லி, சாம்பார் போன்றவை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் குடும்ப வருமானத்தில் பங்களிக்கிறார். ஆனால் அவளது உழைப்பு பெண்களின் அடையாளம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. அவள் ஒரு “supporting character” அல்ல. அவள்தான் குடும்பத்தின் இதயம். அவளது அமைதியும் உறுதியும், குடும்பத்தின் நம்பிக்கையை தாங்கும் தூணாக இருக்கின்றன.

பிரபுவின் பயணம் – கனவுகளுக்கும் திறனுக்கும் இடையே
பிரபு, கல்வியில் சவால்களை எதிர்கொள்கிறான். Tuition fees, பள்ளி செலவுகள். அவனது பயணம் ஒரு சாதாரண மாணவனின் மனதளவிலான போராட்டங்களை பிரதிபலிக்கிறது. தந்தையின் கனவுகளுக்கும், தன் திறனுக்கும் இடையே ஒரு நுணுக்கமான சமநிலை.
ஆர்த்தியின் மௌனம் – மரியாதையை இழக்கும் மௌன வன்முறை
ஆர்த்தியின் கதையோ இன்னும் ஆழமானது. திருமணத்துக்குப் பிறகு, அவள் பணக்கார குடும்பத்தில் மருமகளாக சென்று, அடக்குமுறைகளும், மௌன வன்முறைகளும் நிறைந்த சூழலில் வாழ்கிறாள். அவளை ஒரு வேலைக்காரி போல நடத்துகிறார்கள். மரியாதை கிடைக்காது என்பது ஒரு புறம். ஆனால் அவள் இதை தன் பெற்றோரிடம் சொல்ல மறுக்கிறாள், ஏனெனில் அவர்கள் திருமணத்துக்காக அதிக செலவு செய்திருக்கிறார்கள். “அவர்கள் இவ்வளவு சிரமப்பட்டு என் கல்யாணம் செய்தாங்க… இப்போ நான் எப்படி சொல்வேன்?” என்ற குற்ற உணர்ச்சியில் அவள் தன்னை அடக்கிக்கொள்கிறாள்.
பெண்கள் எதிர்த்து நிற்க வேண்டும் – அடையாளம் இழக்க வேண்டாம்
இந்தக் கதையின் மிக முக்கியமான அடுக்காக, பெண்கள் தங்கள் அடையாளத்தையும், மரியாதையையும் காப்பாற்ற வேண்டும் என்பதைக் காட்சிப்படுத்துகிறது. பெற்றோர் செலவு செய்திருக்கிறார்கள் என்பதற்காக, அல்லது அவர்கள் சிரமப்பட்டிருக்கிறார்கள் என்பதற்காக, ஒரு பெண் தன் அடையாளத்தை இழக்க வேண்டிய அவசியமில்லை. மௌனமாய் தாங்குவது தைரியம் அல்ல; தைரியம் என்பது எதிர்த்து நிற்பது.
நடிப்பு, இசை, மற்றும் உணர்ச்சி
யோகி பாபுவின் நகைச்சுவை தருணங்கள், சரத்குமார் மற்றும் தேவயானியின் பரந்த அனுபவம், சித்தார்த், மீதா ரகுநாத் மற்றும் சைத்ரா அச்சார் ஆகியோரின் நவீன நடிப்பு; அனைத்தும் கதைக்கு உணர்ச்சி ஆழத்தையும் யதார்த்தத்தையும் கொண்டு வருகின்றன.. அம்ரித் ராம்நாத்-ன் இசை, பாம்பே ஜெயஸ்ரீ-யின் இசை மரபை தொடரும் ஒரு புதிய முயற்சி போல தோணுகின்றது.

இயக்குநர் ஸ்ரீ கணேஷ், 3BHK கதையை வெறும் வீடு பற்றிய கனவாக அல்ல, ஒரு குடும்பத்தின் மௌனங்களால் நிரம்பிய பயணமாக மாற்றியுள்ளார். அரவிந்த் சசிதானந்தத்தின் குறுநாவலை அடிப்படையாகக் கொண்டு, அவரது உலகத்தை பார்க்கும் சந்தர்ப்பமாக இந்த படம் அமைந்துள்ளது. சாதாரண மனிதர்களின் சிரமங்கள், உறவுகளின் மாறுபாடுகள், மற்றும் தலைமுறைகளின் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நுணுக்கமாக பின்னப்பட்டுள்ளன. 3BHK ஒரு வீடு பற்றிய கதை அல்ல; அது ஒரு கனவை வீடாக மாற்றும் குடும்பத்தின் அடையாளம். ஸ்ரீ கணேஷின் அமைதியான இயக்கம், அந்த கனவின் மென்மையான ஒலியாக நம்முள் ஒலிக்கிறது.

3BHK ஒரு cinematic shift. இது வழமையான mass crowd pleaser அல்ல, ஆனால் middle-class Tamil families-ன் emotional reality-ஐ பேசும் ஒரு bold attempt. இது ஒரு “slow burn”, ஆனால் அதன் தாக்கம் நீண்ட நேரம் மனதில் நிற்கும்.
மேலும் இது போன்ற கருத்துக்களுக்கு எங்களது வலைத்தளத்தைப் பார்வையிடுக – https://snehidi.com/